மாதம் ஒன்றுக்கு 45 டொலர்களுக்கு மேல் செலவாகும் தொலைபேசி சேவையை-plan புதிதாகப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரதும் வருமானம் மற்றும் நிதிநிலை குறித்த சோதனையை (credit and income check) மேற்கொள்ளும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுகை குழுவினால்-ACMA தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஆலோசனையின்படி இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்புதிய நடைமுறையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், ஆண்டொன்றுக்கு ஆயிரம் டொலர்களுக்கு மேல் செலுத்தும் வகையில் தொலைபேசி மற்றும் சேவையை கொள்முதல் செய்பவர்கள் மீது நிதி மற்றும் வருமானநிலை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி சேவைக்குரிய பணத்தை செலுத்தமுடியாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி சேவையை வழங்கி அவர்கள் மீது கடன் சுமைகளை ஏற்படுத்துவதும், போதிய வருமானம் இல்லாதவர்கள் மற்றும் அரசு வழங்கும் ஓய்வூதியம் பெற்று வருகிறவர்கள் பெருந்தொகையான பணத்தை இவ்வகை தொலைபேசி சேவைகளுக்குள் செலுத்தி கடனாளிகளாகியிருப்பதும் ACMA மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
ஆகவே, வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த புதிய நடைமுறையைக்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப்புதிய நடைமுறை விற்பனை நோக்கத்துடன் செயற்படுகின்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களை ஒருபோதும் காப்பாற்றப்போவதில்லை என்று வாடிக்கையாளர் நல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
