நியூ சவுத் வேல்ஸ் மாநில சிறைகளில் அதிகரித்துவரும் கைதிகளின் எண்ணிக்கையை அடுத்து ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை அம்மாநிலத்தில் Grafton பிரதேசத்தில் 798 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுவருகிறது.
சுமார் 90 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவில் 1700 கைதிகளை தடுத்துவைக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுவரும் இந்த சிறைச்சாலை அடுத்த வருட நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறையில் 1000 உயர்பாதுகாப்பு ஆண் கைதிகளையும் 300 உயர் பாதுகாப்பு பெண் கைதிகளையும் 400 இடைநிலைப்பாதுகாப்பு கைதிகளையும் தடுத்துவைக்கக்கூடியளவில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படும் 2020 ஆம் ஆண்டிலிருந்து 20 வருடங்களுக்கு, 2.6 பில்லியன் டொலர் பெறுமதியான, சிறையை நிர்வகிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் SERCO எனப்படும் பிரித்தானிய பாதுகாப்பு சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புதிய சிறைச்சாலையில் பணிபுரிவதற்கு சுமார் 600 பேரை வேலைக்கு சேர்க்கும் பணியை SERCO நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி நியூ சவுத் வேல்ஸ் சிறைச்சாலைகளில் தற்போது 13 ஆயிரத்து 475 கைதிகள் தண்டனைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
