ஆஸ்திரேலியாவை பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான சிறப்புப் பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் Malcolm Turnbull அறிவித்துள்ளார்.
இதை எவ்வாறு செய்யலாம் என்ற விபரங்கள் அடங்கிய அரசின் அறிக்கையின் அடிப்படையில், இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
விளையாட்டு மைதானங்கள், shopping centres, pedestrian malls, விழா நடைபெறும் இடங்கள், மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால், இந்த இடங்களில் எப்படியான பாதுகாப்புப் பொறிமுறைகளை மேற்கொள்ளலாம் என இவ்வறிக்கை விபரிக்கிறது.
இதன்படி பொதுமக்கள் மீது வாகனங்களை மோதி தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் concrete bollards- எனப்படும் தடுப்புக்களை நிரந்தரமாக அமைத்தல், X-ray screening மற்றும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல், தேவைப்படும் இடங்களில் மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தல் போன்ற பல பொறிமுறைகள் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்சின் நீஸ், லண்டன் மற்றும் அண்மையில் பார்சிலோனாவில் நடத்தப்பட்ட வாகனத் தாக்குதல்களையடுத்து, நாடு முழுவதும் புதிய பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசு தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.