ஆஸ்திரேலியாவில் பயணிகளுக்கான வாடகை வாகனங்களை ஓட்டுகின்றவர்களின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பத்து ஓட்டுனர்களில் ஒருவர் பயணிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என்றும் ஆறு வீதமானவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அறியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய போக்குவரத்துத்துறை தொழிலாளர் ஒன்றியத்தினால் நாடுமுழுவதிலுமுள்ள பயணிகளுக்கான வாடகை வாகன சேவையை வழங்கிவரும் 1100 ஓட்டுனர்களுக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதத்துக்கும் ஒக்டோபர் மாதத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே மேற்படி விவரம் தெரியவந்துள்ளது.
சுமார் 969 பேர் தாங்கள் ஏதோ ஒரு வகையில் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளார்கள். தாங்கள் சேவை வழங்கும் பயணிகளில் பெரும்பாலும் மூவரில் ஒருவர் தங்கள் மீது துவேஷமான வசைச்சொற்களை பயன்படுத்துவதாக இந்த வாகன ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
33 வீதமானவர்கள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தப்படுவதாக கூறியுள்ளார்கள். பயங்கரவாதி என்றும் மற்றும் பல வார்த்தைகளாலும் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக ஓட்டுனர்கள் கூறுகிறார்கள்.
இந்த கருத்துக்கணிப்பில் Uber, Ola, Taxify, DiDi உட்பட அனைத்து வாடகை வாகன நிறுவனங்களை சேர்ந்த ஓட்டுனர்களின் கருத்துக்களும் பதிவு செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
