நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பெற்றோல் விலையேற்றம் மீண்டுமொரு தடவை பயனாளர்களை பயமுறுத்தியிருக்கிறது.
மெல்பேர்னில் நேற்றைய தினம் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 167.9 சதத்தினை எட்டியதன் மூலம் பத்து வருடங்களுக்கு பின்னர் மீண்டுமொரு தடவை இந்த உச்ச விலையினை பெற்றோல் எட்டியிருக்கிறது என MotorMouth என்ற பெற்றோல் விலைத்தரவுகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மெல்பேர்னில் 167.9 சதத்தினை நேற்றைய தினம் எட்டியிருந்த பெற்றோலின் விலை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டுள்ள சராசரியின்படி பெற்றோல் விலை சிட்னியில் 163.2 சதங்கள், பிறிஸ்பனில் 157.4 சதங்கள், பெர்த்தில் 158.9 சதங்கள், அடிலெய்ட்டில் 148 சதங்கள், டார்வினில் 157.1 சதங்கள், ஹோபார்ட்டில் 160 சதங்கள், கன்பராவில் 158.2 சதங்கள் என பதிவாகியிருக்கிறது.
உலக சந்தையில் கச்சாய் எண்ணையின் விலை அதிகரிப்பதுதான் ஆஸ்திரேலியாவிலும் பெற்றோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பொருண்மிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் தற்போது பாடசாலை விடுமுறைக்காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் விலையேற்றம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று பயனாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
