பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்களது அன்றாட ஆகாரத்தில் நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளாதமையே பெருமளவான நோய்க்குணங்களை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியர்களின் தொப்பைகளுக்கும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பிரதான காரணம் இதுவே என்று ஆஸ்திரேலிய அரசின் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமாகிய CSIRO அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அந்த அமைப்பு தனது ஆராய்ச்சி தொடர்பாக தெரிவிக்கும்பேது - ஆஸ்திரேலிய சனத்தொகையில் மூன்றிலிரண்டு பங்கு எண்ணிக்கையானவர்கள் ஒழுங்கான - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை உட்கொள்வதில்லை. சுமார் 83 வீதமானவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தங்களது அன்றாட ஆகாரத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. இதன் காரணமாக வயிற்றுக் கோளாறு, எடை அதிகரிப்பு உட்பட பல்வேறு நோய் அறிகுறிகளுக்கு உள்ளாகிறார்கள். மனித உடலில் தூய பக்டீரியாக்களை செலுத்தக்கூடிய மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்வது அத்தியாவசியமானது என்பதை ஆஸ்திரேலயர்கள் அரைவாசிப்பேர் உணர்கிறார்கள் இல்லை- என்று அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மாத்திரமல்லாமல் வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளும் junk food எனப்படுகின்ற ஊட்டமில்லாத உணவுகளின் அடிமைகளாகி, ஊட்டச்சத்துள்ள உணவுகளை - குறிப்பாக மரக்கறிகளையும் பழங்களையும் ஒதுக்குவதும் மறப்பதும் துரதிஷ்டவசமானது என்று CSIRO அமைப்பு கூறியுள்ளது.
