ஆஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது கைதுசெய்யப்பட்டு இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் ஆஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருவதாக The Guardian கூறியுள்ளது.
சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு புலம்பெயர்ந்து சென்று வெளிநாட்டு வதிவிட உரிமை பெற்ற பின்னரும் நாட்டுக்கு திரும்பும்போது கைது செய்யப்படுகிறார்கள் என்றும் தடுத்துவைக்கப்படுகிறார்கள் என்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயரந்த Uighur சமூகத்தவர்கள் கன்பராவில் முறையிட்டிருக்கிறார்கள்.
இதன்பிரகாரம் சீனாவில் காணமல்போயுள்ள - கைதுசெய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வதிவிட உரிமைபெற்றவர்கள் குறித்த சம்பவங்களை விசாரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
