மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தனக்குத் தானே தீங்கிழைத்து மரணமடைந்துள்ள பின்னணியில், இவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த செப்டம்பர் 2ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களின் பின் மரணமடைந்தார்.
சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah Hill முகாமுக்கு மாற்றப்பட்டு சில வாரங்களின் பின்னர் இவரது மரணம் சம்பவித்திருந்தது.
இந்தநிலையில் Saruuan Aljhelie-இன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததை சற்றும் கவனத்தில் எடுக்காத குடிவரவு தடுப்பு முகாம் ஊழியர்கள் அவரை தகாத முறையில் நடத்தியதுடன் தமது கடமையிலிருந்து தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள குடும்பத்தினர், Saruuan Aljhelie-இன் மரணத்திற்குப் பொறுப்பான ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்டநடவடிக்கையில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஈராக்கிலிருந்து வந்து புகலிடம்கோரிய Saruuan Aljhelie-இன் குடும்பம் சிட்னியில் வாழ்ந்துவரும் அதேநேரம் இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

