நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern-க்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பாக நியூஸிலாந்து பொலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும் தீவிர வலதுசாரி கருத்துக்களையும் வெள்ளையின வெறிபிடித்த வசனங்களையும் எழுதிய டுவிட்டர் கணக்கொன்னிறிலிருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலில், நியூஸிலாந்து பிரதமரை விழித்து "அடுத்தது நீ தான்" - என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும் இது தொடர்பாக பலர் பொலீஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அந்தக்கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் NZ Herald ஊடகம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பின்னர் அந்த தாக்குதல் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் சமூக வலைத்தள நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்து பல்வேறு தரப்புக்களில் எழுந்தது.அதன்பின்னர், குறிப்பிட்ட காணொளிகள் டுவிட்டர் மற்றும் முகநூல்களிலிருந்து அந்த நிறுவனங்களினால் களையப்பட்டன.
இவ்வாறானதொருநிலையில், நியூஸிலாந்து பிரதமருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல் பதிவொன்று டுவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது. அதுவும் தீவிர வலதுசாரி பதிவுகளை தொடர்ச்சியாக பகிர்ந்துவந்த ஒரு கணக்கிலிருந்து பகிரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கணக்கின் இன்னொரு பதிவில், நியூஸிலாந்து பொலீஸாருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
