ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ள Joint Standing Committee on Migration என்ற விசாரணைக் குழுவின் முதலாவது அமர்வுகள் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதில் குடிவரவு முகவர்கள் மற்றும் மாணவர் விசா பெற்றுக்கொடுப்பதற்கென இயங்கும் நிறுவனங்கள் போன்றவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
பதிவு செய்யப்படாத குடிவரவு முகவர்கள் பலரால் ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் வர முற்படுபவர்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்துச்செல்வதாக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இவ்விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த 4 மாதங்களாக சர்வதேச மாணவர் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் இயங்கும் குடிவரவு மற்றும் கல்வி முகவர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பொதுமக்களிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் இவ்விசாரணைக்குழு சேகரித்து வந்தது.
இதுவரை Commonwealth Ombudsman, Education and Training Department of Australia, Australian Skills Quality Authority (ASQA) உள்ளிட்ட 34 அமைப்புக்கள் தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
