போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியப் பெண்ணான Maria Elvira Pinto Exposto–க்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான Maria Elvira Pinto Exposto, 1.5 கிலோகிராம் methamphetamine போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் நடந்த வழக்கு விசாரணையின் போது இணையம் மூலம் அறிமுகமான ஆண் நண்பர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு Maria Elvira-க்கே தெரியாமல் அவரது பயணப்பையில் போதைப்பொருள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து Maria Elvira குற்றமற்றவர் எனக் கருதிய மலேசிய உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் அவரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது.
எனினும் இதை எதிர்த்து அரச தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பு நேற்று வெளிவந்த நிலையில், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் Maria Elvira-க்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்புக்கு எதிராக Maria Elvira மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
