இந்து மதத்தைப் பற்றிய “இழிவான” கருத்துகளைக் கூறிய கருவூலக்காப்பாளர் ஜொஷ் ஃப்ரைடன்பெர்க் (Josh Frydenberg) பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள் கோரியுள்ளார்கள்.
நாடாளுமன்ற விவாதத்தில், Labor கட்சியின் கருவூல பேச்சாளர் ஜிம் சால்மர்ஸைத் (Jim Chalmers) தாக்கும் முயற்சியில், திரு ஃப்ரைடன்பெர்க் இந்து மதம் மற்றும் பிற இந்திய மதங்களைப் பற்றி பலமுறை கிண்டலான கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். கடந்த வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் நியூசிலாந்து பாணியிலான “நல்வாழ்வு வரவு செலவுத் திட்டத்தை”(“wellbeing budget”) Labor கட்சி பின்பற்றுவதாகவும் விமர்சித்தார்.
இரு கைகளையும் கூப்பி, தியானத்தில் தொழுவது போல் சைகை செய்தபடி, “[Labor கட்சியினர்] அவர்களின் ஆன்மீகத் தலைவரான Rankin தொகுதி உறுப்பினரால் [ஜிம் சால்மர்ஸ்] ஈர்க்கப்பட்டுள்ளார்கள்” என்று ஜொஷ் ஃப்ரைடன்பெர்க் கூறினார்.

“இமயமலையிலுள்ள அவரது ஆசிரமத்திலிருந்து நேரடியாக வருவது போல் Rankin தொகுதி உறுப்பினர் நேற்று எனது அறைக்குள் வந்தார் ... வெறுங்காலுடன், காவி உடையில், சாம்பிராணி புகையுடன், ஒரு கையில் உருத்திராட்சம், மறு கையில் நல்வாழ்வு நிதிநிலை அறிக்கை. எந்த யோகா நிலையில் அமர்ந்து Rankin தொகுதி உறுப்பினர் இந்த நல்வாழ்வு வரவு செலவுத் திட்டத்தை எடுத்துரைப்பார் என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்”
என்று கூறிய கருவூலக்காப்பாளர் தொடர்ச்சியாக சில யோகா நிலைகளுக்குப் பெயரிட்டார்.
ஜொஷ் ஃப்ரைடன்பெர்க் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் இப்படி பேசும் போது, பிரதமர் Scott Morrison, Nationals கட்சித் தலைவர் Michael McCormack மற்றும் பிற மூத்த Coalition உறுப்பினர்கள் எக்காளமிட்டுச் சிரிப்பதை வீடியோ காணொளிகள் காட்சிப்படுத்தியுள்ளன.
அதில் “இரசிப்பதற்கு எதுவும் இல்லை” என்று (Hindu Council of Australia) ஆஸ்திரேலிய இந்து மன்றத்தின் உறுப்பினர் ராம் ராமசுவாமி நேற்று வெள்ளிக்கிழமை கூறினார்.
“தனது எதிர்ப்பை வெளிக்கொணர முயற்சிக்கையில் அவர் ஏன் இந்துக்களை இழிவுபடுத்த முயன்றார்? மற்ற மதங்களை இழிவு படுத்தும் தைரியம் அவருக்கு இருக்கிறதா?” என்று SBS செய்திப் பிரிவினரிடம் கூறிய ராம் ராமசுவாமி, “அவரது நடத்தையை நான் கண்டிக்கிறேன்” என்றார்.
“Liberal கட்சியுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்துக்கள் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைதியை நேசிக்கும் சமூகத்தை இந்த அரசியல்வாதிகள் மதிக்கப் பழக வேண்டும்.” என்று மற்றொரு ஆஸ்திரேலிய இந்து மன்ற உறுப்பினர் மித்ரா தேசாய் கூறினார். கருவூலக்காப்பாளரின் கருத்துகளால் தான் ஆழ்ந்த கோபமடைந்ததாக அவர் மேலும் கூறினார்.
“இது ஒரு சாதாரண கிண்டல் அல்ல. திட்டமிட்டு, முன்னரே தீர்மானித்து, அளந்து சொல்லப்பட்ட வார்த்தைகள். இந்து நடைமுறைகளை அவமதித்தது போன்று ஆபிரகாமிய (யூத, கிறிஸ்தவ) நடைமுறைகளை இதே போன்று ஒப்பீடு செய்ய அவர் துணிவாரா?” என்று கேட்ட ஹிருஷிகேஷ் தேசாய் (Hrishikesh Desai) என்பவர், “பொது மன்னிப்பு ஒன்றை வழங்குமாறு அவரிடம் கோருகிறேன்” என்றார்.
தன்னை ஒரு பெருமை வாய்ந்த ஆஸ்திரேலிய இந்து என்று வர்ணித்த ஹிருஷிகேஷ் தேசாய், திரு ஃப்ரைடன்பெர்க்கின் பேச்சு வேதனையளிக்கிறது என்றார்.
“இதில் மிகவும் வேதனைக்குரிய, புண்படுத்தும் விடயம் என்னவென்றால், சிறு அரசியல் இலாபத்தைப் பெற, முழு சமூகத்தையும் இழிவு படுத்திப் பேசியுள்ளார் கருவூலக்காப்பாளர்” என்று அவர் கூறினார்.
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் மதம் ‘இந்து’ என்று பலர் சுட்டிக் காட்டினார்கள்.
இந்தக் கருத்துகள் இனவெறியைத் தூண்டுபவை அல்ல என்று SBS Hindi ஒலிபரப்பிடம் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவ் ஷர்மா (Dave Sharma) கூறினார்.
“Labor கட்சியின் கருவூல பேச்சாளர் ஜிம் சால்மர்ஸைக் கிண்டல் செய்து ஜொஷ் நகைச்சுவையாகச் சொன்ன கருத்துகள் அவை. நகைச்சுவை உணர்வுள்ள எவரும் அதனைக் குற்றமாகப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று டேவ் ஷர்மா மேலும் கூறினார்.
இருப்பினும், இதனால் மனமுடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
ஒரு யூதரான ஜொஷ் ஃப்ரைடென்பெர்க், யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சமீபத்திய மாதங்களில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்டது குறித்த உண்மைகளை உள்ளடக்கி, விக்டோரிய மாநிலம் அண்மையில் பாடத்திட்டத்தில் கொண்டுவந்த மாற்றத்தை ஜொஷ் ஃப்ரைடென்பெர்க் கடந்த புதன்கிழமை பாராட்டினார்.
“இனவெறி மற்றும் வெறுப்பு அறியாமையிலிருந்து ஏற்படுகிறது, அதனால்தான் கல்வி - குறிப்பாக எங்கள் இளைஞர்களின் கல்வி மிகவும் முக்கியமானது” என்று ஜொஷ் ஃப்ரைடன்பெர்க் ட்வீட் செய்திருந்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து அவரது கருத்துக்காக SBS செய்திப் பிரிவினர் ஜொஷ் ஃப்ரைடன்பெர்க் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளது.
