ஆஸ்திரேலிய அரசினால் நிரந்தர வதிவிட உரிமை(permanent residency) வழங்கப்பட்ட பஹ்ரைன் நாட்டு அகதி ஒருவரை தாய்லாந்தில் வைத்து கைது செய்துள்ள இன்டர்போல் பொலீஸார் பஹ்ரைன் நாட்டின் பிடியாணையின் பிரகாரம் அவரை அந்நாட்டு அரசிடம் கையளிப்பதற்கு நடவடிக்கையெடுத்திருக்கிறது.
தாய்லாந்தில் பாங்கொக் விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட அகதியை பார்ப்பதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாக விரைந்துள்ள அவரது மனைவி, நாடு கடத்தப்படவுள்ள தனது கணவரை காப்பாற்றுமாறு தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஹ்ரைன் நாட்டை சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் Hakeem Al-Araibi (வயது 25) 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி மூன்று வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவரை அகதியாக ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அரசு அண்மையில் நிரந்தர வதிவிட உரிமையும் வழங்கியிருந்தது. Hakeem Al-Araibi மெல்பேர்ன் உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டு விளையாடிவருகிறார்.
இதேவேளை, Hakeem Al-Araibi மற்றும் பஹ்ரைன் நாட்டு உதைபந்தாட்ட வீரர்கள் சிலர் பஹ்ரைனில் பொலீஸ் நிலையமொன்றை தாக்கி தீவைத்துக்கொழுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை அறிவித்து, அவரை கைது செய்வதற்கு இன்டர்போலின் ஊடாக பகிரங்க பிடியாணையும் பிறப்பித்திருந்தது.ஆனால், Hakeem Al-Araibi இந்தக்குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருக்கிறார்.
இந்நிலையில், தனக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் தாய்லாந்து சென்றவரை, அங்கு காத்திருந்த இன்டர்போல் பொலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
Hakeem Al-Araibi தாய்லாந்து புறப்படுவதற்கு முன்னர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுக்கு அறிவித்து, தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட பின்னர்தான் பயணம் செய்தார் என்று இவரது மனைவி தெரிவித்துள்ளார்.
