ஆஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை தொடங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய பொலீஸார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவே இந்த விசாணைகள் நடைபெற்றுவருவதாக ஆஸ்திரேலிய பொலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதமளவில் இந்த செய்தியை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று வெளியிட்டதுடன் போர்க்குற்றத்தையிழைத்த படையதிகாரி என்று தெரிவித்து ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து, செய்தி வெளியிட்ட ஊடகத்துக்கு எதிராக குறிப்பிட்ட அதிகாரி மானநட்ட வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்தார்.
இந்த இழுபறி தொடர்ந்துகொண்டுவந்த நிலையில், அந்த அதிகாரி உட்பட சில படையினருக்கு எதிராக தற்போது போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பொலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முதலில் தகவல் கிடைக்கப்பெற்றதும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முன்னாள் நீதிபதியொருவர் தலைமையில் உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு சில உண்மைகள் கண்டறியப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பல படையினர் இந்த விசாரணைகளில் முன்னிலையாகி தங்கள் வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் தற்போது பொலீஸ் விசாரணை தனியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் ஆஸ்திரேலிய பொலீஸார் வெளியிட மறுத்துவிட்டார்கள்.
