ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற காட்டுத்தீயினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 18 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்கு இன்னமும் திரும்பவில்லை என்றும், கடந்த வருடம் மாத்திரம் சுமார் 25 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவில் மொத்தமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்றும், அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு என்றும் Internal Displacement Monitoring Centre (IDMC) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் ஐந்து கோடி 8 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளார்கள். இவர்களில் 3 கோடி 34 லட்சம்பேர் கடந்த ஆண்டு மாத்திரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் 31 ஆம் திகதிவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 25 ஆயிரம்பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இயற்கை அனர்த்தமே இதற்கு பிரதான காரணம்.
சுமார் ஒரு கோடி ஹெக்டேயர் நிலப்பரப்பினை எரித்து சுமார் மூவாயிரம் வீடுகளையும் ஏழாயிரம் கட்டடங்களையும் சேதமாக்கிய காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வேறு இடங்களிலேயே வசித்துவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
