கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது.
விக்டோரிய மருத்துவமனையொன்றில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுகளிலுள்ள முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த 70 ஆவது நபராவார்.
இதுதவிர நேற்றையதினம் மாத்திரம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மூவர் மற்றும் டஸ்மேனியாவில் ஒருவர் என மொத்தம் நால்வர் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்திருந்தனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 53 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 6586 ஆக காணப்படும் அதேநேரம் இவர்களில் 4100 பேருக்கு மேற்பட்டோர் குணமடைந்துவிட்டனர். 184 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்-51 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 33 பேருக்கு ventilators பொருத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனா தொற்றினால் எவ்வித மரணங்களும் பதிவாக ஒரே பகுதியாக Northern Territory காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirusஎன்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
