மெல்பேர்னில் நடைபெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள இந்த தகவலை அடுத்து, இனிமேல் தொடர்ந்தும் இவ்வாறாக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மெல்பேர்னில் நடைபெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய - 30 வயதுகளிலுள்ள - நபருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு அடுத்த நாளிலிருந்து இவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்ததாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுத்தொடர்பாக சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள அறிவிப்புக்களின் பிரகாரம் விக்டோரியாவில் தற்போது 20 பேருக்கு அதிகமாக யாரும் ஒரு இடத்தில் கூடவேண்டாம் என்ற சட்டம் நடைமுறையிலுள்ளது.
இந்த நிலையில் இதனை யாரும் மீறவேண்டாம். ஆர்ப்பாட்டங்களுக்கு போகவேண்டாம் என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
