ஆஸ்திரேலியாவின் 2018ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி 2018-19ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின் deficit- துண்டுவிழும் தொகை அல்லது பற்றாக்குறை 18.2 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.
அதேநேரம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2.2 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிதிநிலை அறிக்கையின் முக்கிய வெற்றியாளர்களாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் காணப்படுகின்றனர்.
அடுத்த ஜுலை முதல் ஆண்டுக்கு 37,000 டொலர்கள் வரை வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்த வேண்டிய ஆண்டு வரியிலிருந்து 200 டொலர்கள் குறைக்கப்படும். இத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு 48,000-90,000 டொலர்கள் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 530 டொலர்கள் குறைக்கப்படும்.
அதேநேரம் 125,000 டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது செல்லுபடியாகாது.
இதுதவிர அடுத்த ஆண்டு ஜுலை முதல் 87,000-90,000 டொலர்கள் வரை வருமானமீட்டுபவர்கள் செலுத்த வேண்டிய வரி 37 வீதத்திலிருந்து 32.5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Lower tax bracket- குறைந்த வருமானமீட்டுபவர்கள் என்ற வரையறைக்குள் அடங்குபவர்கள் ஆண்டொன்றுக்கு ஈட்டும் வருமானம் 37,000 டொலர்கள் வரை காணப்பட்ட நிலையில் இது 2022ம் ஆண்டு முதல் 41,000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுகிறதது. இதனால் ஆண்டொன்றுக்கு 41,000 வரை வருமானம் ஈட்டுபவர்கள் 19 வீத வரியே செலுத்த வேண்டியிருக்கும்.
இதன்மூலம் நாட்டில் வரிசெலுத்தும் 94 வீதமானவர்கள் டொலர் ஒன்றுக்கு 32.5 சதங்களுக்கு மேல் வரிசெலுத்த வேண்டியிருக்காது என கருவூலக்காப்பாளர் Scott Morrison சுட்டிக்காட்டியுள்ளார்.
