குழந்தை பராமரிப்பு (Child Care)
அரசின் புதிய நிதி நிலை அறிக்கையில் கணிசமான சலுகை அறிவிக்கப்பட்டிருக்கும் பிரிவினர் இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினர்.
குழந்தைப் பராமரிப்பை எளிதாக்க அல்லது இதற்காக குடும்பங்கள் செலவு செய்வதை குறைக்கும் வகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் அரசு 4.7 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு (2023) ஜூலை மாதம் முதல் $530,000 க்கும் குறைவான குடும்ப வருமானம் பெறும் குடும்பங்களுக்கான குழந்தை பராமரிப்பு மானிய விகிதம் அதிகரிக்க்கப்படும். அதே வேளையில் ஆண்டுக்கு $80,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களின் மொத்த குழந்தை பராமரிப்பு மானிய விகிதம் 85 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்தப்படும்.

பெற்றோர் விடுப்புத் திட்டம் (Paid Parental Leave)
தற்போது ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்புத் திட்டம் என்பது நாட்டின் குறைந்தபட்ச ஊதியத்தில் ஒருவருக்கு 18 வாரங்கள் மற்றும் கூடுதல் இரண்டு வாரங்கள் என்று ஊதிய விடுப்பு என்று பெற்றோர் விடுப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2026 ஆண்டு ஜூலை மாதம் முதல் பெற்றோர் விடுப்புத் திட்டம் 26 வாரங்கள் அல்லது ஆறு மாதங்கள் என்று உயர்த்தப்படுகிறது.
மருந்துப் பயன் திட்டம் (PBS)
மருந்து பயன்கள் திட்டத்தின் (Pharmaceutical Benefits Scheme) மூலம் ஒருவர் மருந்து வாங்க ஒரு ஸ்கிரிப்ட்டிற்கான அதிகபட்சமாக தற்போது $42.50 செலுத்தவேண்டியுள்ளது. அது இனி $30 ஆகக் குறைக்கப்படும். இது அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

கல்வி
TAFE இல் கல்வி கற்க விரும்புவோருக்கு அரசு 480,000 கட்டணமில்லா தொழிற்கல்வி இடங்கள் தருவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச இடங்கள், பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்டவர்கள், இளைஞர்கள், வேலை தேடுபவர்கள், ஊதியம் பெறாதவர்கள், பாரம்பரியமற்ற படிப்புத் துறைகளில் உள்ள பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இலவசமாக தரப்படும் 480,000 TAFE கல்வி இடங்களில் குறைந்த பட்சம் 15,000 இடங்கள் முதியோர் பராமரிப்பு சிறப்புப் படிப்புகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதனால் பலர் முதியோர் பராமரிப்பு தொடர்பான கல்வி கற்க ஆர்வம் காட்டுவர் என்று அரசு எதிர்பார்க்கிறது.

TAFE யில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல நாட்டில் நிலவும் குறிப்பிட்ட திறன் பற்றாக்குறை (skills shortage) உள்ள துறைகளில் பலர் தேர்ச்சிபெற 20,000 கூடுதல் பல்கலைக்கழக இடங்களுக்கு $48.5 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வி, சுகாதாரம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பலகலைக் கழகத்தில் கல்வி கற்க விரும்புவோரின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
பல்கலைக்கழக இடங்களில், சமூக-பொருளாதாரப் பின்னணியில் நலிவடைந்தவர்கள், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்டவர்கள், முதன் முதலாக பல்கலைக்கழகத்தில் சேரும் குடும்பங்களை சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும்.

ஊதிய இடைவெளி குறைப்பு (gender pay gap)
ஆணுக்கு அதிக சம்பளம், பெண்ணுக்கு குறைவு என்றிருக்கும் பாலின ஊதிய இடைவெளியை குறைக்க தொழிலாளர்கள் அல்லது வேலைகள் தொர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். இது குறைந்த ஊதியம் பெறும் துறைகளில் உள்ள பெண்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதை எளிதாக்கும்.
மின்சார வாகனங்கள்
இனிமேல் தகுதியான மின்சார கார்களுக்கு fringe benefits taxes (FBT) யிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் இறக்குமதி வரியிலிருந்து ஐந்து சதம் விலக்கு அளிக்க்கப்படும். சுமார் $50,000 மதிப்புள்ள ஒரு மின்சார காரை ஒருவர் வாங்கும்போது, FBT விலக்கு மூலம் அந்த நபருக்கு ஒரு வருடத்திற்கு $4700 வரை சேமிப்பு இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

ஓய்வூதியம் பெறுவோர்
வயது தொடர்பாக ஓய்வூதியம் பெறும் முதியோர் அவர்களின் வழக்கமான கொடுப்பனவுகளை பாதிக்காமல் அதிகமான நேரங்கள் வேலை செய்யும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதன்படி, ஓய்வூதியம் பெறுவோர் 2022-23 ஆம் ஆண்டில் $4000 அதிகமாகச் சம்பாதிக்கலாம். இது அவர்களின் ஓய்வூதியத்தை பாதிக்காது. அதன் மூலம் அவர்கள் ஈட்டும் வருமானம் $7800ல் இருந்து $11,800 ஆக உயரும்.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
