காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிப்பதாக கூறிக்கொண்டு வீட்டுக்கதவுகளை தட்டும் பணம் பறிக்கும் கும்பல்கள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியாவில் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட Gippsland பிரதேசத்தை அண்டிய Bairnsdale, Metung, Lakes Entrance ஆகிய இடங்களில் இவ்வாறான கும்பல்கள் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் ஆளில்லா வீடுகளின் கதவுகளையும் போய் தட்டி நோட்டமிடுவதாகவும் பொலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்டோரியாவில் ஆறு கவுன்ஸில் பிரதேசங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட Gippsland பிரதேசத்திலிருந்து 70 சதவீதமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். 48 இடங்களில் தொடர்ந்தும் காட்டுத்தீ எரிந்துகொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வகையான மோசடிக்கும்பல்கள் அனர்த்நிலையை பயன்படுத்தி தங்கள் கைவரிசையை காண்பிக்க எத்தனிப்பதாக பொலீஸார் எச்சரித்துள்ளனர்.
காட்டுத்தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு உதவிசெய்யும் உத்தியோகபூர்வ அமைப்புக்கள் எவையும் வீடு வீடாக சென்று கதவைத்தட்டி காசு கேட்கவில்லை என்பதை பொலீஸார் உறுதிசெய்திருக்கிறார்கள்.
ஆகவே, பொதுமக்கள் இதுவிடயத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலீஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியான மோசடிக்கும்பல் தொடர்பான நடமாட்டத்தை அறிந்தால் 131 444 என்ற இலக்கத்துக்கு முறையிடுமாறும் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
