ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் மாணவர் போராட்டம் ஒன்று ஏற்பாடாகியுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து ஸ்கொட் மொறிஸன் நீக்கப்படவேண்டுமென வலியுறுத்தியும், தீயணைப்பு பிரிவுக்கு அதிக நிதி ஒதுக்க்குவதுடன் காலநிலை பேரிடர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக இந்தப்போராட்டத்திற்கு முகநூல் ஊடாக வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலளித்துள்ளார்கள்.
சிட்னியில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர மையங்களை முற்றாக செயலிழக்கச்செய்யும் இந்தப்போராட்டங்களை பிற்போடுமாறு பொலீஸார் கோரியுள்ளபோதும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான பொலீஸ் ஆளணி தற்போது, பேரிடர் முகாமைத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாலும் நாளையதினம் உயர் வெப்பநிலை காணப்படும் என்பதாலும் இப் போராட்டத்தினை வேறொரு நாளில் நடத்துமாறு பொலீஸ் ஆணையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், இதுவொரு தேசியப்பிரச்சினை இதற்கான உரிய தீர்வினை அரசு முன்வைக்கும் வரைக்கும் இந்தப்போராட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கும் என்று போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.
