ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக உள்ளூர் மீட்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் களமிறங்குகின்றனர். மீட்புப் பணிக்காக சுமார் மூவாயிரம் ராணுவ வீரர்கள் (Australian Defence Force reservists) களமிறங்குகின்றனர் என்று அரசு இன்று அறிவித்தது.
மூவாயிரம் ராணுவ வீரர்களும் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் இருப்பில் (reservists) இருப்பவர்கள் என்பதால், இவர்கள் உடனடி பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கட்டுப்பாடின்றி எரியும் காட்டுத்தீ காரணமாக தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து காட்டுத்தீ பிரதேசங்களைவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேறிவருகின்றனர். இந்த மக்களை தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து பத்திரமாக மீட்கவும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தவும் ராணுவத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேவை ஏற்படின் மீட்கப்படும் பொதுமக்களை அடலைட் முதல் பிரிஸ்பேன் வரை அமைந்துள்ள ராணுவ முகாம்களில் தங்க வைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சிட்னியில் நிலைகொண்டுள்ள ஆஸ்திரேலிய கப்பற்படைக்குச் சொந்தமான HMAS Adelaide கப்பல் அங்கிருந்து பாதுகாப்புப்படை வீரகளுடன் இன்று கிளம்பி NSW மாநிலத்தின் தெற்கு கடற்கரையை வந்தடைகிறது. NSW மாநிலத்திற்கும் விக்டோரிய மாநில எல்லை பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிவதால், பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த படையில் சுமார் 400 பேர் மருத்துவ பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர். மேலும் 300 டன் உணவுப் பொருட்களும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
காட்டுத்தீ மீட்புப்பணியில் ஈடுபடும் வகையில் மேலும் நான்கு தீயணைப்பு விமானக்களை இருபது மில்லியன் டாலர் செலவில் வாடகைக்கு வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் உள்ளூர் மீட்புப் பணிக்காக சுமார் மூவாயிரம் ராணுவ வீரர்கள் (Australian Defence Force reservists) களமிறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் Linda Reynolds கூறினார்.
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் துவங்கிய தற்போதிய காட்டுத்தீ அழிவில் இதுவரை 23 பேர் உயிர் இழந்துள்ளனர்.
