நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள அகதிகள் மருத்துவதேவைகளுக்காக தம்மை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்குமாறு கோரி தாக்கல் செய்யும் வழக்குகளை எதிர்த்து வாதாடுவதற்காக மட்டும் சுமார் மூன்றரை லட்சம் டொலர்களை கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலிய அரசு செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஏனைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை மேலதிக சிகிச்சை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்குமாறு மருத்துவர்கள் விடுக்கும் பரிந்துரைகளை ஆஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் ஏற்க மறுக்கும்போது இதை எதிர்த்து அகதிகள் நீதிமன்றத்தின் உதவியை நாடுவது வழக்கமாகும்.
தமக்கெதிராக தாக்கல் செய்யப்படும் வழக்கினை எதிர்கொள்வதற்கென சட்டத்தரணிகளை ஏற்பாடுசெய்து தமது தரப்பு வாதத்தை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முன்வைத்துவருவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.
இவ்வாறு சட்டச்செலவுக்கு மாத்திரம் அரசு கடந்த நிதியாண்டில் சுமார் 3 லட்சத்தி 20 ஆயிரம் டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது வீண்செலவு என்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை மேலதிக சிகிச்சைக்காக அனுப்புமாறுகோரி அகதிகள் தாக்கல் செய்யும் வழக்குகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தரப்புக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தோல்வியே கிட்டுகின்றபோதும், தொடர்ந்தும் நோயாளிகளை ஆஸ்திரேலியா அழைத்துவர அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துவருவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
