ஆஸ்திரேலியாவுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்ற சுற்றுலாப்பயணிகள் பட்டியலில் கடந்த வருடமும் வழமைபோல ஆசிய நாட்டவர்களே முன்னணி இடங்களை பிடித்திருப்பதாக சர்வதேச ரீதியில் கணக்கெடுப்பினை மேற்கொள்ளும் அமைப்பொன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை நோக்கி பெரும் எண்ணிக்கையில் படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகளில் தொடர்ந்தும் சீனர்களே முதலிடத்திருப்பதாகவும் மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையான 85 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் சீனர்களே என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்த இந்த சீனர்களினால் 11.7 பில்லியன் டொலர்கள் கடந்த வருடம் செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த செலவு 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 வீத அதிகரிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு அதிக எண்ணிக்கையில் வந்த சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இரண்டாம் மூன்றாம் இடங்களில் முறையே நியூஸிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டவர்கள் இடம்பெற்றாலும் இந்தியா தொடர்ந்தும் நான்காம் இடத்தை தக்கவைத்திருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த வருடம் இந்தியாவிலிருந்து 3 லட்சத்து 38 ஆயிரம் பேர் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்துள்ளார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை இந்த எண்ணிக்கையானது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 வீத அதிகரிப்பு என்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளினால் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் கடந்த வருடம் மாத்திரம் 44 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர், இந்த தொகையானது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏழு வீத அதிகரிப்பு என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் 4 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் கூடுதலாக வருகை தந்ததன் மூலம் 3.1 பில்லியன் டொலர் வருமானம் மேலதிகமாக பொருளாதாரத்திற்கு வளம் சேர்ந்திருப்பதாக தெரிவிக்கபட்டிருக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான - 4.37 மில்லியன் - சுற்றுலாப்பயணிகள் நியூ சவுத் வேலஸ் மாநிலத்துக்கும் இரண்டாவதாக - 3.03 மில்லியன் - சுற்றுலாப்பயணிகள் விக்டோரியாவுக்கும் குயின்ஸ்லாந்துக்கு 2.76 மில்லியன் சுற்றுலாப்பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
