அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படும் அபாயத்துடன் லண்டன் சிறையிலுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவின் பிரபல நடிகை பமிலா அன்டர்ஸன் சென்று சந்தித்துள்ளார்.
ஜூலியனை அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு சிறையில் சந்தித்த முதலாவது நபர் பமீலா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜூலியனை சந்தித்த பின்னர் சிறையின் வெளியில் செய்தியாளர்களுடன் பேசும்போது பமீலா கூறுகையில்- ஜூலியன் ஒரு நல்ல மனிதர் என்றும் அவர் தனது அன்புக்குரியவர் என்றும் ஒரு புத்திஜீவியை தனது நெருங்கிய நண்பரை உயர்பாதுகாப்பு சிறையில் இவ்வாறு சந்தித்தது மிகுந்த வருத்தத்தை தருவதாகவும் கூறினார். உண்மையை வெளிக்கொண்டுவருவதற்காக மிகவும் உயர்ந்த அர்ப்பணிப்பை செய்துள்ள ஜூலியனுக்கு எல்லோரது ஆதரவும் இந்தமாதிரியான சூழ்நிலையில் தேவை என்றும் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான அவரது போராட்டமானது மிக நீண்டதாக இருக்கப்போவதாகவும் பமீலா மேலும் தெரிவித்திருக்கிறார்.
லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் ஜூலியன் தஞ்சம்புகுந்திருந்தபோதும் நடிகை பமீலா ஜூலியனை அங்கு சென்று சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
