தான் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறையில் தனக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் மசூதியில் ஐம்பது பேரைக்கொன்று குவித்த Brenton Tarrant, சிறைச்சாலை நிர்வாகத்திடம் முறைப்பாட்டு செய்திருக்கிறார்.
நியூசிலாந்தின் ஓக்லாந்து சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கொலைக்குற்றவாளிக்கு தற்போது தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு மணி நேரம் மாத்திரமே சிறைக்கூண்டிலிருந்து வெளியில் வந்து உலாவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தடைகள் ஒரு கைதிக்குரிய அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் விருந்தினரை பார்க்கமுடியாது என்றும் தொலைபேசியில் யாருடனும் பேசமுடியாது என்றும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் மோசமானவை என்றும் Brenton Tarrant முறைப்பாடு செய்துள்ளார்.
2004 ஆம் ஆண்டின் சிறைச்சாலை நடைமுறைகள் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் குறிப்பிட்ட கைதிக்குரிய உரிமைகள் சிறையில் பேணப்படுவதாகவும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படமுடியாது என்றும் ஓக்லாந்து சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் மசூதியில் மேற்கொண்ட 50 பேர் படுகொலை சம்பவத்தை அடுத்து கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நபர் எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
