சிட்னியில் ஹோட்டலொன்றில் ஏற்பட்டுள்ள நச்சு வாயுக்கசிவு காரணமாக சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண் கடி மற்றும் எரிச்சல் ஆகிய தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அம்புலன்ஸ் குழுவினர் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
Pullman Sydney Hyde Park ஹோட்டலில் இன்று காலை உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்தபோது அந்த திரவக்கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 ஆவது மாடியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது.
இந்த புகையின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் அனைவரும் கண் கடி, தோல் எரிவு போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருமலினால் பாதிக்கப்பட்டவர்களும் ஹோட்டலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நியு சவுத்வேல்ஸ் அம்புலன்ஸ் சேவையின் தகவலின்படி, சுமார் 30 பேருக்கு ஹோட்டல் பகுதியில் வைத்து உடனடியாக மருத்துவ உதவியளிக்கப்பட்டது. ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
