சிட்னி நகரின் மையப்பகுதியில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதுடன் மேலும் பலரைத் தாக்க முயன்ற நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.
இன்று மதியம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிட்னி நகரில் அமைந்துள்ள corner of Clarence St & King St பகுதியிலுள்ள விடுதியில் வைத்து 41 வயதுப் பெண் ஒருவரை மாமிசம் வெட்டும் கத்தியால் தாக்கிய 21 வயது நபர், ஏனையவர்களையும் தாக்க முற்பட்டவேளையில் அங்கிருந்த பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான பெண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
அதேநேரம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கட்டடத்திலிருந்து 21 வயதுடைய பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேற்கு சிட்னியின் Marayong பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் குறித்த தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறினர்.
இன்று மதியம் முதல் தாக்குதல் இடம்பெற்ற பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதுடன் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
