சிட்னியில் வீசிவரும் கடும் காற்று காரணமாக, சிட்னி விமானநிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ள அதேநேரம் பல விமானப்பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் விமானசேவைகள் மாத்திரமே கடும் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியூர் விமானசேவைகள் தடையின்றி இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், சிட்னி விமானநிலையத்திலுள்ள மூன்று ஓடுபாதைகளில் ஒன்று மட்டுமே இயங்கு நிலையில் உள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிட்னிக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் 26 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குவான்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வேர்ஜின் நிறுவனத்தின் 40 விமானங்களும் ஜெட்ஸ்டாரின் 35 விமானங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளை முடிந்தவரை விரைவாக அனுப்புவதற்கான பணி நடைபெறுவதாக இவ்விமானநிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இன்று சிட்னியிலிருந்து, அல்லது சிட்னிக்கு விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் தமது விமானப்பயணத்தின் status-நிலையை உறுதிசெய்த பின்னர் விமானநிலையத்திற்குச் செல்வதன் மூலம் வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியுமென விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
