சிட்னியிலுள்ள இந்துக்கோவிலொன்று இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. கோவிலின் உள்ளேயிருந்த சுமார் முப்பது கடவுள் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலாளிகள் கோவில் சுவரில் JESUS என்று எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி Auburn பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
சிட்னி Regent Park பகுதியில் அமைந்துள்ள பாரதிய மந்திர் ஆலயமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
முன்பு கிறீஸ்தவ தேவாலயமாக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மண்டபம் 1998 இலிருந்து இந்து ஆலயமாக பயன்படுத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டு, பெருந்தொகையான இந்து பக்தர்களின் பங்களிப்போடு இயங்கிவருகிறது.
சம்பவம் இடம்பெற்ற அன்று கோவில் மண்டபத்திலிந்து புகைவருவதை கண்டு சென்று பார்த்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்து ஓடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் உள்ளே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சேதமடைந்த சிலைகளை புதுப்பிப்பதற்கும் உடைவுகளை சரி செய்வதற்கு குறைந்தது ஐம்பதினாயிரம் டொலர்கள் தேவை என்று கோயில் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
கோவிலின் மீது தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் வெறுப்பு மாத்திரமே என்றும் கோவிலின் உண்டியலுக்கு எந்த சேதமும் விளைவிக்கப்படவில்லை என்பதிலிருந்து தாக்குதலாளிகளின் நோக்கம் வேறு என்பது தெரிகிறது என்று கோவில் பொறுப்பானர் கூறியுள்ளார்.
கோவில் பூசைகள் மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவை தற்போது தற்காலிகமாக கோவில் பொறுப்பாளரின் வீட்டில் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
