சிட்னியில் காணாமல்போயிருந்த பல்மருத்துவர் பிரீத்தி ரெட்டியின் சடலம் சூட்கேஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிட்னி Penrith பகுதியைச் சேர்ந்த 32 வயதான இந்தியப் பின்னணி கொண்ட பல்மருத்துவர் பிரீத்தி ரெட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பல்மருத்துவம் குறித்த மாநாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அறிவிக்கப்பட்டதையடுத்து இவரைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டது.
கடைசியாக ஞாயிறு காலை 11 மணியளவில் தனது வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரீத்தியின் பேச்சில் எவ்வித பதற்றமோ பயமோ இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப்பின்னணியில் பிரீத்தியையும் அவரது காரையும் தேடும்பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று இரவு பிரீத்தியின் சடலம் Strachan St, Kingsford பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது காருக்குள்ளிருந்த சூட்கேசிலிருந்து கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீரித்தி ரெட்டி ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவருக்குத் தெரிந்த ஆண் ஒருவருடன் தங்கியிருந்ததாகவும், குறித்த ஆண் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை New England Highway பகுதியில் வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்ட வாகன விபத்தில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி மரணமடைந்த நபர், பிரீத்தியின் முன்னாள் காதலராக இருக்கலாம் எனவும் இவரே பிரீத்தியை கொலை செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இக்கொலை குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
