மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவை முன்னிட்டு சிட்னியில் அவரது உருவச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த சிலையை நாளை மறுதினம் 22 ஆம் திகதி சிட்னி Parramatta பகுதியில் திறந்து வைக்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் திறந்துவைக்கப்படவுள்ள மூன்றாவது காந்தி சிலை இதுவாகும். ஏற்கனவே பிறிஸ்பன் மற்றும் கன்பராவில் மகாத்மா காந்தி சிலைகள் நிறுவப்பட்டு திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு வருகைதந்திருந்தபோது இந்தியப்பிரதமர் மோடி பிறிஸ்பனில் இரண்டாவது காந்தி சிலையை திறந்து வைத்திருந்தார்.
இதுவேளை, மெல்பேர்ன் Dandenong பகுதியில் மகாத்மா காந்தி சிலையொன்றினை நிர்மாணித்து அதனை திறந்துவைப்பதற்கு இந்த வருட முற்பகுதியில் Dandenong நகர கவுன்ஸிலிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டபோதும் அந்த யோசனை தொடர்பாக கவுன்ஸில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் அது நிராகரிக்கப்பட்டது.
இந்திய அமைப்புக்களின் சம்மேளனம் (FIAV) முன்வைத்த இந்த யோசனையை Dandenong கவுன்ஸில் கருத்துக்கணிப்புக்கு முன்வைத்தபோது இதில் கலந்துகொண்ட 960 பேரில் 50 வீதமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையையடுத்து Dandenong கவுன்ஸில் காந்திக்கு சிலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டிருந்தது.
இந்நிலையில், சிட்னியில் தமிழர்கள் செறிந்துவாழும் Parramatta Jublee Park பகுதியில் நாளை மறுதினம் காந்தி சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் மேயர் Andrew Wilson அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.
