சிட்னி பென்ரித் பொலீஸ் நிலையத்திற்கு வந்து துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கத்தொடங்கியதால் பொலீஸாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்த Daniel King(32) என்ற நபர் கடந்த சில வாரங்களாகவே பாரதூரமான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
குறித்த நபர் இந்த வருடம் மூன்று பெண்களை கர்ப்பிணிகளாக்கியுள்ளார் என்றும் தனது கடைசிக்காதலியை கைப்பிடிப்பதற்காக இரண்டாவது காதலியின் வயிற்றில் வளர்ந்த தனது குழந்தையை அழிக்குமாறு கடந்த சில வாரங்களாகவே கேட்டுக்கொண்டிருந்தார் என்றும் The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
Daniel King மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவருடன் ஒரே ஒருநாள் உறவிலிருந்ததன் மூலம் அவர் கர்ப்பமாகியதாகவும் ஆனால் அக்கருவை கலைத்துவிடுமாறு Daniel King கூறியதை அப்பெண் ஏற்க மறுத்ததை அடுத்து, தான் தற்கொலை செய்யப்போவதாக Daniel King மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம், Daniel King- இன் மற்றொரு காதலி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்றும் அவரையே தனது நிரந்தர துணையாக Daniel King கைப்பிடிக்கவிருந்தார் என்றும் அதற்காகவே மேற்குறிப்பிட்ட பெண்ணிடம் கருவைக் கலைத்துவிடுமாறு கூறியிருந்தார் என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதன்கிழமை Daniel King குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வெளியில் நின்று துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளார். அப்பெண் தனது குழந்தைகளுடன் கட்டிலிற்கு கீழ் ஒளிந்திருக்கிறார். Daniel King அங்கிருந்து புறப்பட்டு சென்று பென்ரித் பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியபின்னர் பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் தன்னைக் கொலைசெய்வதற்கு நபர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தாக Daniel King மிரட்டியிருந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸாரிடம் தான் முறையிட்டிருந்ததாகவும் 3 பிள்ளைகளின் தாயான அப்பெண் தெரிவித்துள்ளார்.
Daniel King தனது மரணம் மிகப்பெரியதாக அமையவேண்டும் என்று அவர் கடந்த சில தினங்களாகவே சொல்லி வந்தார் என்று நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை இந்த வருட ஆரம்பத்தில் இவருடனான உறவில் இருந்த மற்றுமொரு பெண் கர்ப்பமானபோதும் பின்னர் அந்த உறவு முறிந்துகொண்டதை அடுத்து அவர் கருக்கலைப்பு செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
