பெண்ணுரிமைக் குழுக்கள், குற்றவியல் வல்லுநர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் புதிய சட்டங்களை இயற்றுமாறு கோருகின்றனர்.
உடலுறவின் போது ஒரு துணைவியின் (அல்லது துணைவனின்) ஒப்புதல் இல்லாமல் அல்லது அவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது, அல்லது ஆணுறையின் உபயோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் ஆணுறையைப் பயன்படுத்தாமல் இருப்பது ‘திருட்டு’ என்று ACT சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆணுறை அணியாமல் உடலுறவு கொள்வதால் பாலியலால் பரவும் நோய்கள் (STI) ஏற்படவோ, தேவையற்ற கர்ப்பங்கள் ஏற்படவோ, மன அழுத்தம் உள்ளிட்ட தீவிர உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படவோ சாத்தியம் இருக்கிறது.
உடலுறவின் போது ஒருவர் தனது துணையின் கவனத்தை ஈர்க்காமல் ஆணுறையைக் கழற்றும் பழக்கம் பொதுவாக நடைமுறையில் இருக்கிறது என்பதை தரவுகள் காட்டுகின்றன.
Monash பல்கலைக்கழகம் மற்றும் மெல்பன் பாலியல் சுகாதார மையம் 2018ஆம் ஆண்டு ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வில் 2,000 பேர் பங்கு கொண்டார்கள்.
ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் மூன்றில் ஒருவர் தனது துணைவன் தனக்குத் தெரியாமல் ஆணுறையைத் திருட்டுத்தனமாக உடலுறவின் போது அகற்றியதாகக் கூறியிருக்கிறார். இதே கருத்தை, ஆய்வில் கலந்து கொண்ட ஐந்து ஆண்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இதே போன்றதொரு ஆய்வு, அமெரிக்காவில் 21 வயதிற்கும் 30 வயதிற்குமிடைப்பட்ட 626 ஆண்களுடன் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் 10 சதவீதத்தினர் அவர்களது துணைக்குத் தெரியாமல் ஆணுறையை அகற்றியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். தமது வாழ்நாளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு முறை அப்படிச் செய்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னர் நினைத்ததை விட இது ஒரு பாரிய பிரச்சனை என்று பாலியல் வன்கொடுமையால் நேரடியாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்பவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பெண்கள் அதிகம் பேசுவதில்லை என்றும், சட்டத்தில் இது குறித்து தெளிவான விளக்கம் இல்லாமல் இருப்பது அதற்கு ஒரு காரணம் என்று Rape and Domestic Violence Services Australia என்ற அமைப்பின் தலைமை நிர்வாகி Hayley Foster, SBS செய்திப் பிரிவினரிடம் கூறினார்.
இது ஒரு பாரிய பிரச்சனை
‘உடலுறவின் போது மற்றவருக்குத் தெரியாமல் ஆணுறையை அகற்றுவது ஒரு குற்றச் செயல்’ என்று எமது நாட்டில், ACT பிராந்தியம் சட்டம் இயற்றியுள்ளது. இதேபோன்ற சட்டங்கள் அமெரிக்காவின் California மாநிலத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இது போன்ற சட்டங்கள் நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் அடிப்படையில் சிலர் தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
சட்டத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை
நாடு முழுவதும் ‘உடலுறவின் போது மற்றவருக்குத் தெரியாமல் ஆணுறையை அகற்றுவது ஒரு குற்றச் செயல்’ என்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் இது செய்யப்படுகிறது என்பதால் அது சட்டப்படி குற்றம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், இந்த வாதம் ஒரு நீதிமன்றத்தில் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அத்துடன், அப்படி நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டாலும் அது ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது குறித்து கல்வியாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
“அதற்கு தெளிவான பதில் இல்லை” என்று SBS செய்திப் பிரிவினரிடம் RMIT பல்கலைக்கழகத்தின் Dr Brianna Chesser தெரிவித்தார்.

Dr Brianna Chesser is a criminologist at RMIT University, a criminal lawyer and clinical psychologist. Source: Brianna Chesser/supplied
அதனால்தான் தெளிவான சட்டங்களை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார்.
தெளிவான சட்டம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை எளிதாக்கும்
ACT பிராந்தியத்தில் நடைமுறைக்கு வந்துள்ள வெளிப்படையான சட்டங்கள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று Swinburne பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளனாக கடமையாற்றும் Dr Rachael Burgin அழைப்பு விடுத்துள்ளார்.

தெளிவான, வெளிப்படையான சட்டங்கள் குற்றம் புரிவோரைத் தண்டிப்பதை எளிதாக்குவது மட்டுமின்றி இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதையும் எளிதாக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுப்பதே இறுதி இலக்கு என்றும் நாடு முழுவதும் தெளிவான சட்டங்கள் நடைமுறையில் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் எவை, தவிர்க்கப்பட வேண்டியவை எவை என்பது குறித்து பொது மக்கள் அறிய உதவும் என்று Rape and Domestic Violence Services Australia என்ற அமைப்பின் தலைமை நிர்வாகி Hayley Foster கூறினார்.
இப்படியான நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுப்பதே இறுதி இலக்கு
‘உடலுறவின் போது மற்றவருக்குத் தெரியாமல் ஆணுறையை அகற்றியதாக’ ஒரு வழக்கு விக்டோரியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. COVID-19 காரணமாக, விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.