சம்பள உயர்வு கோரி விக்டோரிய பொலீஸார் புதுவித போராட்டம்!

Victoria police

Source: Victoria Police

தங்களது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வேகமாக செல்லும் வாகன ஓட்டுனர்களிடம் தாங்கள் தண்டப்பணம் அறவிடப்போவதில்லை என்று விக்டோரிய பொலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பில் தாங்கள் தவறப்போவதில்லை. ஆனால், அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வாகன ஓட்டுனர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதை தாங்கள் இடைநிறுத்தப்போவதாக தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள பொலீஸார் அறிவித்துள்ளனர்.

நான்கு வீத சம்பள உயர்வு கோரி விக்டோரிய பொலீஸ் சம்மேளனம் கடந்த ஐந்து மாதங்களாக நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில், இரண்டு வீத சம்பள உயர்வையே அரசு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. ஆனால், அது போதாது என்கிறது விக்டோரிய பொலீஸ் சம்மேளனம்.

ஆஸ்திரேலியாவிலேயே அதி உயர் சம்பளமாக ஆண்டொன்றுக்கு நான்கு லட்சத்து 41 ஆயிரம் டொலர்கள் பெறுகின்ற விக்டோரிய Premier Daniel Andrews மாநிலத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொலீஸாருக்கு நான்கு வீத சம்பள உயர்வு கொடுப்பதற்கு அடம்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலீஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் வேலையிலிருந்து நீக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் வாக்கெடுப்பில் சுமார் நூறு பொலீஸார் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளார்கள். இந்த வாக்கெடுப்பு Fair work ஆணையகத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் எதிர்வரும் டிசெம்பர் 8 ஆம் திகதி முதல் பொலீஸாரின் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பில் 17 ஆயிரத்து 200 பொலீஸார் ஈடுபடுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now