Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

'2 கோடி கணக்கு விவரங்களை தொலைத்த கொமன்வெல்த் வங்கி'- கிறீன் கட்சி சீற்றம்

Signs for the Commonwealth Bank are seen outside a branch in the central business district of Sydney

Source: Getty

தனது வாடிக்கையாளர்களின் 2 கோடி வரையிலான கணக்கு விவரங்கள் காணாமல்போயுள்ளதை பாரதூரமான சம்பவம் இல்லை என்று கூறும் கொமன் வெல்த் வங்கியின் தன்னிலை விளக்கமானது, மிகவும் கண்டனத்துக்குரியது என்று ஆஸ்திரேலிய கிறீன் கட்சி தனது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

2000 - 2016 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 16 வருட கால கணக்குகளை தொலைத்துவிட்டு, அந்த விவரங்களின் மூலம் வங்கியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்றும், அவற்றை யாராவது களவாடியிருந்தாலும் அதன் ஊடாக வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடிவிடமுடியாது என்றும் கொமன்வெல்த் வங்கி சப்பை கட்டு கட்டுவது எரிச்சலை ஊட்டுவதாக கிறீன் கட்சியின் கருவூலத்துறை பேச்சாளர் Peter Whish-Wilson தெரிவித்துள்ளார்.

தனது வங்கியின் 16 வருட கால கணக்கு விவரங்களை சேகரிப்பதற்காக வெளியக தகவல் சேகர அமைப்பொன்றிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த அமைப்பு தனது தகவல் சேகரிப்பு பொறிமுறையின்போது வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய இரண்டு magnetic tape-களை தொலைத்துவிட்டதாகவும் கொமன்வெல்த் வங்கி இன்று தனது சகல வாடிக்கையாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

காணமல்போன இந்த magnetic tape-களில் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, வங்கி கணக்கு ஆகிய விவரங்கள் உள்ளனவே தவிர, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு கடவுச்சொற்களோ அல்லது வங்கிக்கணக்குகளின் வழியாக மோசடி மேற்கொள்ளக்கூடிய விவரங்களோ இல்லை என்றும் கொமன் வெல்த் வங்கி தெரிவித்துள்ளது.

காணமல்போன கணக்கு விவரங்களின் ஊடாக யாரும் வங்கியின் நடவடிக்கைககளுக்குள் ஊடுருவ முடியாது என்றும் கொமன்வெல்த் வங்கி உறுதி கூறியுள்ளது.

ஆனால், நாட்டின் முன்னனி வங்கியொன்று வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான விவரங்களை தொலைத்துவிட்டு அந்த சம்பவத்தின் மூலம் எந்த பாதிப்பும் இடம்பெறாது என்று கூறுவது முட்டாள்தனமான கூற்று என்றும், திட்டமிட்டு செயற்படுகின்ற குற்றவாளிகளின் கைகளின் இந்த விவரங்கள் சென்று சேர்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் கிறீன் கட்சி கருவூலத்துறை பேச்சாளர் Peter Whish-Wilson மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தகவல் இழப்பு குறித்து கொமன் வெல்த் வங்கி உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தாதது ஏன் என்றும் வங்கிகள் மீதான விசாரணைகளை ஆரம்பித்த பின்னர்தான் இப்படியான எல்லா விவரங்களும் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன என்றும், இப்படிப்பட்ட முறைகேடுகளை பாதுகாக்கும் வகையில்தான் இந்த விசாரணைகளை நடத்தவேண்டாம் என்று பிரதமர் Turnbull முன்பு பிடிவாதமாக நின்றாரா என்றும் லேபர் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.


2 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now