நீங்கள் Centrelinkக்கு அழைப்பெடுத்து மறுபக்கத்திலிருந்து யாரும் பதிலளிக்காததால் சலித்துப்போய் இருக்கிறீர்களா? அல்லது அழைப்பில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதா?
இப்படியான நிலை உங்களுக்கு மட்டுமல்ல. நாட்டில் பல பேர் இதை தினமும் அனுபவிக்கிறார்கள்.
கடந்த வருடம் 22 மில்லியன் பேருடைய அழைப்புக்களுக்கு Centrelink பதிலளிக்கவில்லை எனவும் 7 மில்லியன் பேர் அழைப்பில் காத்திருந்துவிட்டு இடையில் தொடர்பைத் துண்டித்திருப்பதாகவும் செனற் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Centrelink இன் சிக்கலான கொடுப்பனவு முறை மற்றும் சீரற்ற தொலைபேசிச் சேவை என்பனவே இந்நிலைக்கு மிக முக்கிய காரணங்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் தொலைபேசியூடான சேவையில் குறைபாடு இருப்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் ஆனால் தமக்கு வழங்கப்படும் நிதியுதவிக்குள் என்னென்ன முன்னேற்றங்களைச் செய்ய முடியுமோ அவற்றை மட்டுமே தம்மால் செய்ய முடியுமெனவும் Department of Human Services கூறியுள்ளது.
அந்தவகையில் தற்போது அழைப்பில் காத்திருக்கும் நேரத்தை 15 நிமிடங்களுக்குள்ளாக குறைத்திருப்பதாக Department of Human Services கூறியுள்ளது. எனினும் அதற்கும் மேல் காத்திருக்க நேர்வதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
