அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிப்பணம் (Centrelink) பெறுகின்றவர்களிடம் போதைப்பொருள் பாவனை குறித்த சோதனை நடத்துவதற்கு லிபரல் கூட்டணி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கோரும் சட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டு செனற்றில் தோற்கடிக்கப்பட்டபோதும் தற்போது மீண்டும் கொண்டுவருவதற்கு லிபரல் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிப்பணம் (Centrelink) பெறுகின்ற சுமார் ஐயாயிரம் பேரிடம் பரீட்சார்த்தமாக இந்தப்போதைப்பொருள் பயன்பாடு குறித்த சோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக லிபரல் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தப்புதிய சட்டத்தின் கீழ் போதைப்பொருள் பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு அரசாங்க உதவிப்பணம் நேரடியாக வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்களுக்குரிய அடிப்படை தேவைகளான வீட்டு வாடகை, உணவு, பிள்ளை பராமரிப்பு போன்ற தேவைகளுக்கான பணத்தை சமூக சேவைகள் திணைக்களம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தனித்தனியாக வழங்கும்.
இத்திட்டத்தினை லேபர் மற்றும் கிறீன்ஸ் கட்சிகள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
