நாட்டிலுள்ள பல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அரச கொடுப்பனவில் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு பல பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்பதாலும் Social Security System இல் சில மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் Christian Porter அறிவித்துள்ளார்.
குறிப்பாக 4300 இளம் பெற்றோர் சுமார் 45 வருடங்களுக்கு அரசின் நலன்புரி கொடுப்பனவுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளதால், இதற்கு 2.4 பில்லியன் டொலர் வரிப்பணம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 80 வீதமான இளம் தாய்மாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் அரச கொடுப்பனவைப் பெறுகின்றனர்.
அதேபோல் நாட்டிலுள்ள 11,000 இளம் பராமரிப்பாளர்கள் அரச கொடுப்பனவை 43 வருடங்களுக்குப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இதற்கு 5.2 பில்லியன் டொலர் வரிப்பணம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியாக பல நலன்புரி கொடுப்பனவுகளுக்கு ஆகும் செலவு 2026ம் ஆண்டு 277 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலையை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் Christian Porter தெரிவித்தார்.
அரச கொடுப்பனவில் அதிகம் தங்கியிருக்க வேண்டியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தொழில்முறைப்பயிற்சி மற்றும் தொழில் முதலீடு போன்றவற்றை வழங்குதல் உட்பட பல மாற்றுத்திட்டங்களின் மூலம் அரச கொடுப்பனவில் தங்கி வாழாதபடி செய்வதற்கான செயற்றிட்டங்கள் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளதாக அமைச்சர் Christian Porter குறிப்பிட்டுள்ளார்.