பெற்றோரை வரவழைப்பதை கடினமாக்கும் புதிய சட்டம் மீளப்பெறப்படுகிறது!

visa

Source: Getty Images

வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஒன்று, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தநிலையில் அதை இரத்துச் செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவர்களாக இருக்கவேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது.

அதேபோல, தனி நபர் ஒருவர் தனது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதானால், அவர் ஆண்டொன்றுக்கு 45 ஆயிரத்து 185 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்கவேண்டும் என்ற பழைய சட்டம் திருத்தப்பட்டு, அவர் 86 ஆயிரத்து 606 டொலர்களை ஆண்டு வருமானமாக பெறுபவராக இருக்கவேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்தப்பின்னணியில் அரசு கொண்டுவந்துள்ள இம்மாற்றம் பலரையும் மிகமோசமாகப் பாதிக்கும் ஒன்று எனச் சுட்டிக்காட்டிய கிரீன்ஸ் கட்சி செனட்டர் Nick McKim, இச்சட்டமாற்றத்தை ரத்துச் செய்யும்வகையில் இவ்வாரம் நாடாளுமன்றில் disallowance motion கொண்டுவரப்படும் என்றும் ஏனைய கட்சி அங்கத்தவர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதேபோல் குறித்த சட்டமாற்றத்திற்கெதிராக குடிவரவு முகவர்கள் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இப்படி பலதரப்புக்களிலிருந்தும் குறித்த சட்டமாற்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இப்புதிய மாற்றத்தைக் கைவிட அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now