“யாத்ரீகர்கள் தமது நாட்டிற்கு வருவதை சவுதி அரேபியா தடை செய்துள்ளது,” “ஃப்ரான்ஸ் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” இவை தற்போதைய செய்தித் தலைப்புகள். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று ஒரு ‘தீர்க்கமான கட்டத்தில்’ இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்டை நாடான ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இஸ்லாமியர்களின் புனிதமான இடங்களுக்கு வருவதை சவுதி அரேபியா தடை செய்துள்ளது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ளன.
COVID-19 என்றும் அழைக்கப்படும் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமே அதிகரிக்கிறது என்ற நிலை மாறி விட்டதால் அது குறித்த கரிசனை அதிகரித்துள்ளது. தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளும் இந்தத் தொற்று நோயின் மையமாக மாறியிருப்பது பாரிய அச்சத்தைக் கிளப்புகின்றன.
“நாங்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருக்கிறோம். நீங்கள் இப்போது விரைவாக செயற்பட்டால், இந்த வைரஸைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம், மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம், உயிர்களைக் காப்பாற்றலாம்” என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஏற்கனவே 2,760 ற்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் கொன்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதன் முதலில் தோன்றிய சீனாவில் தான் பெரும்பாலானோர் இறந்துள்ளார்கள். 45 ற்கும் மேற்பட்ட வேறு நாடுகளில் 81,000 ற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இப்போது சீனாவுக்கு வெளியே, பலர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பதியப்படுகின்றன. வலுவான சுகாதார உள் கட்டமைப்புகளைக் கொண்டிராத வளர்ந்து வரும் மற்றும் வறிய நாடுகளால் இந்த வைரஸ் பரவுதலைச் சமாளிக்க முடியுமா என்ற அச்சத்தை எழுப்புகிறது.
“உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது தான் இப்போது எங்கள் மிகப்பெரிய அக்கறை” என்று டாக்டர் கெப்ரேயஸ் கூறினார்.
பொருளாதார வீழ்ச்சிக்குத் தயாரா?
இந்த வைரஸ் தொற்று காரணமாக பல இடங்களை மக்கள் அணுக முடியாமல் போகும் சாத்தியம் உள்ளதால், வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறு வரலாம் என்றும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை அது குறைக்கலாம் என்ற அச்சம் உலக நிதி மற்றும் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், விளையாட்டுப் போட்டிகளும் திருவிழாக்களும் நடத்தப்படாமல் போகின்றன.
சீனாவை நம்பியுள்ள தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. சுற்றுலா மற்றும் பொருட்களின் உற்பத்தியிலும் சீனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வரும் நாடான ஃப்ரான்ஸில் ஏற்கனவே இரண்டு பேர் இந்த வைரஸால் இறந்துள்ளார்கள் என்றும் அது மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தனது ட்விட்டரில் பதிந்துள்ளார்.
“நாங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோம், ஒரு பாரிய தொற்றுநோய் எம்மை நோக்கி வருகிறது”, என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் COVID-19 பரவுவதால், இஸ்லாத்தின் புனிதமான தளங்களான "உம்ரா" யாத்திரைக்கான வீசாக்களை சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது. இதனால், ஜூலை மாதம் ஆரம்பிக்கும் ஹஜ் யாத்திரை குறித்து கேள்விகள் எழும்பியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை வரவேற்கும் சவூதி அரேபியா, வைரஸ் ‘ஆபத்து’ உள்ள நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வீசாக்களையும் நிறுத்துவதாகக் கூறியது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது அண்டை நாடான ஈரான். ஈரானில் மொத்தமாக 26 பேர் இதுவரை கொரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளார்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானவர்கள் ஈரான் நாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படுபவர்களிற்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஈரானிய அரசு. அதே நேரத்தில், ஈரானின் அண்டை நாடுகளும் ஈரானுடனான தங்கள் எல்லைகளை மூடி விட்டன.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளில் முதன் முதலில் ஈரானியர்களுக்குத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதுவும் நோக்கத்தக்கது.

பல வாரங்களுக்கு பாடசாலைகளை மூடுவதென்று ஜப்பான் முடிவெடுத்துள்ளது. ஒரு உல்லாசக் கப்பலில் இருந்த பயணிகளை ஜப்பானிய அரசு கடற்கரையிலேயே தனிமைப்படுத்தியிருந்தது.
186 ஜப்பானியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் இறந்துள்ளார்கள். கவலைக்குரிய விதமாக, ஆரம்பத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்ட பெண் ஒருவர், பின்னர் பரிசோதனையில் நேர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியிருந்தார். சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் சோதிக்கப்பட்ட போது, அவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
‘தவிர்க்க முடியாதது எதுவும் இல்லை’
528 இத்தாலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன், அதனால் 14 பேர் இறந்துள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மையப்பகுதியான இத்தாலிக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பல அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இத்தாலிக்குப் பயணம் செய்த 61 வயதான ஒருவர் தான் இலத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக ஃபிரேஸில் நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றை எடுத்து சென்றிருக்கிறார். அல்ஜீரியா, டென்மார்க், ருமேனியா மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட பிற நாடுகளும் தமது நாட்டிற்கு இத்தாலியுடன் தொடர்புடையவர்கள் தான் தொற்று நோயை எடுத்து வந்துள்ளதாக பதிவு செய்துள்ளன.
ஆனால், “தவறான அறிக்கைகளை” வெளியிட்டு, தமது நாடு குறித்து அவதூறாகப் பேசி, வெளிநாடுகளில் பீதி கிளப்புகிறார்கள் என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் Luigi Di Maioசாடியுள்ளார்.
திட்டமிடப்பட்ட கூட்டுப் பயிற்சிகளை ஒத்திவைப்பதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய இராணுவங்கள் அறிவித்துள்ளன. சீனாவிற்கு வெளியே மிக அதிகமானவர்கள் இறந்துள்ளது தென் கொரியாவில் தான். தென் கொரியாவில் 1,600ற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், அதில் 12 பேர் இறந்துள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.

சீனா கூட, ஒரு முழு மாகாணத்திலிருப்பவர்கள் வெளியேறுவதற்கோ, மற்றவர்கள் அங்கு செல்வதற்கோ தடை விதித்துள்ளது. பெய்ஜிங் நகருக்கு வருபவர்கள் 14 நாள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும் 29 பேர் சீனாவில் நேற்று இறந்துள்ளார்கள். ஜனவரி மாதத்திலிருந்து தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கையின் மிகக் குறைந்த அளவு இது தான். இருந்தாலும் புதிதாக 433 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் இந்த வைரஸால் பாரிய பாதிப்பு இருக்காது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

“இது மோசமடைய வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன், இது மிகவும் மோசமாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதையும் நாம் தவிர்க்க முடியாது” என்று அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதுவரை தொற்றுள்ளதாக அறியப்பட்ட 60 பேரில், முதல் தடவையாக இந்தத் தொற்று எங்கிருந்து வந்தது என்பதை தெளிவாகக் கூற முடியவில்லை. மக்கள் கூட்டங்களாக இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும், வீட்டிலிருந்து வேலை செய்யத் தயாராகுமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஒரு சந்தையில் தோன்றியதாக நம்பப்படுகிறது, விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் தாவியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே சீன அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த வைரஸ் இத்தனை தூரம் பரவியிருக்காது என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் மரியாதைக்குரிய விஞ்ஞானி ஜாங் நன்ஷான் கூறியுள்ளார் - சீனாவின் ஒரு முக்கிய நபரின் அரிய விமர்சனம் இது.
ஆரம்பத்தில் இந்த வைரஸ் குறித்த செய்திகளை மூடி மறைத்ததாக ஹூபே அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனை வெளி உலகுக்கு முதலில் தெரியப்படுத்திய மருத்துவர் அதே வைரஸால் அந்த அதிகாரிகள் மேலுள்ள வெறுப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த வைரஸ் ஏற்படுத்தும் அபாயத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் டாக்டர் கெப்ரேயஸ் கோரினார்.
“இதனை நாம் சரியான முறையில் கையாளாவிட்டால், அதன் பாதிப்பு மனித குலத்தை எங்கே இட்டுச் செல்லும் என்று சொல்ல முடியாது” என்றார் அவர்.
