Graph, chart என்ற ‘கோட்டுரு’ அல்லது ‘வரைபடம்’ மூலமாக, புள்ளிவிவரங்களை, எளிமையாகவும் ஒப்பீட்டு முறையிலும் (comparison) மிகத்தெளிவாக முன்வைக்கமுடியும். பொருளாதாரவளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு, எரிபொருள்களின் விலை, நாணயங்களின் பெறுமதி, வெப்பநிலை மாற்றம், மழைவீழ்ச்சி என்று இன்னோரன்னவற்றின் மாற்றமடையும் தரவுகளை மிக (effective) திறம்பட, வரைபடங்கள் மூலம் விளக்கமுடியும்.
இப்போது, சர்வதேசரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் Covid 19 என்ற coronavirus தொற்று நோய் எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது என்பதை (graph) வரைபடத்தில் பார்க்கும்போது, curve என்ற இந்த வளைகோடு, ஏறக்குறைய செங்குத்தாக, கீழிருந்து மேலாக, உயர்ந்து கொண்டே செல்வதைக்காணலாம்.
(இது மார்ச் மாதம் 16ஆந்திகதி இருந்த நிலை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)

இந்த வரைபடத்தில் சிவப்பு வளைகோடு ஏனைய நாடுகளில் இந்த நோய் தொற்றும் வேகத்தைக் காட்டுகிறது. இது உயர்ந்துகொண்டே செல்வதை இந்த வரைபடம் காட்டுகிறது.
நீல நிற வளைகோடு சீனாவைப் பொறுத்த அளவில் அங்குள்ள நிலையைச்சொல்கிறது. உயர்ந்துகொண்டே சென்ற நீல வளைகோடு, இப்போது ஓரளவு சமாந்திரமாக (parallel) செல்கிறது. அங்கு இந்த நோய் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது. இதைத்தான் flattening the curve, வளைகோட்டை சமாந்திரமாக்குதல் என்கிறோம்
இந்த நிலையை எட்டவேண்டும் என்றுதான் பல நாடுகளும் கடுமையாக முயன்று வருகின்றன. Flattening the Curve என்ற நிலை உருவாகும் போது, வைத்திய வசதிகள்எல்லோருக்கும் கிடைக்கும் என்பதோடு, வைத்திய உபகரணங்களை, தேவையான நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடிய வசதிகள் ஏற்படும். 100 நோயாளிகளைப் பராமரிக்கக் கூடிய வைத்தியசாலையில் ஒரே நாளில் 1000 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால், நிலைமை கட்டுக்கடங்காது. இதைச்சமாளிக்கவும் முடியாது. நோய் தொற்றும் வேகம் குறைந்தால், வைத்தியர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் மீதான பளு குறையும்.
25.03.2020 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி.

இந்த flattening the curve என்ற நிலை உருவாக, தனிமனித அடிப்படையிலும், அரசியல் நிர்வாக அடிப்படையிலும் பல முயற்சிகள் தொடர்கின்றன. சுகாதாரமான பழக்கவழக்கங்களை மக்களுக்குக் கற்றுக்கொடுத்தல், நோய் பற்றிய சரியான புரிந்துணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஊரடங்குச்சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் என்பன மூலமாக பல நாடுகள் ‘வளை கோட்டை சமாந்திரமாக்கவே’ முயல்கின்றன.
