கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலையினால் வேலையை இழந்து வாடகைப்பணத்தை செலுத்தமுடியாத நிலையில் உள்ளவர்களை வீட்டு உரிமையாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றுவதை தடுக்கும் சட்ட மூலத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்து மாநிலங்களின் தலைவர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.
நாடு முழுவதிலும் வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் எண்பது லட்சம் மக்களுடைய வதிவிட நலன்குறித்து கவனம் செலுத்தும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாடகையை செலுத்தமுடியாதவர்களுக்கு இடர்கால கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து திறைசேரி அதிகாரிகள் ஆலோசித்துவருவதாக The Australian Financial Review ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வாடகைக்கு குடியிருப்பவர்கள் கொரோனா வைரஸ் பரவலினால் தாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபித்தால் மாத்திரமே அவர்கள் இந்த உதவிக்கு தகுதியுடையவர்கள் ஆவர் என்று அமைச்சரவையில் இந்த விடயம் கலந்தோசிக்கப்பட்டபோது பிரதமர் தெரிவித்துள்ளார்.
