கொரோனா பரவலைத் தடுப்பதற்கென நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகக்குறைந்தது இன்னும் 4 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டுபிடிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட சோதனை முறைகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தொற்றுக்களை இனங்கண்டு உடனடியாக செயலாற்றுவதற்கான வலுவை மாநில அரசுகள் அதிகரித்துக்கொள்ளும்வரை இக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பது அவசியமாவதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கு குறைவாக பதிவாகியுள்ள பின்னணியில் இக்கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
எனினும் ஆகக்குறைந்தது இன்னும் 4 வாரங்களுக்காவது இந்நிலை தொடரும் என அறிவித்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன், நாட்டின் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக மிகக்கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ள விக்டோரியா போன்ற மாநிலங்கள் அவற்றை சற்றே தளர்த்துவது தொடர்பில் ஆராயலாம் என குறிப்பிட்டார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
