ஆஸ்திரேலியாவில் இன்று இரவுமுதல் நடைமுறைக்கு வருகின்ற முழுமையான பயணத்தடையினால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் தங்கியிருக்கும் சுமார் இருபது லட்சம் பேர் பாதிக்கப்படவுள்ளனர் என்று ஆஸ்திரேலிய குடிவரவு கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
இரண்டு பிரிவுகளில் இவ்வாறான பாதிப்பு ஏற்படப்போவதாக சுட்டிக்காட்டியுள்ள குடிவரவு கவுன்ஸில், multiple entry கொண்ட சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் ஒருபுறம் தற்போது எழுந்துள்ள கொரோனா சிக்கலினால் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள் என்றும் மறுபுறத்தில், ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான விசேட விசாவில் வந்து அந்த விசா காலப்பகுதி முடிடையும் நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தற்காலிக விசாவில் வந்துள்ளவர்கள், நாட்டின் எல்லைகள் மூடப்படுகின்ற நிலையில் வெளியேறுவதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதேநேரம் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இவர்களுக்கு தொடர்ந்தும் வேலை இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் ஏதாவது உதவிசெய்யுமா என்றால் அது குறித்த அறிவிப்பு எதையும் அரசாங்கம் குறிப்பிடவில்லை.
நாட்டின் எல்லைகள் பூட்டபட்டுள்ள காலப்பகுதியில் தங்களது விசா முடிவடைபவர்கள், குடிவரவு இணையத்தளத்துக்கு சென்று புதிய விசாவுக்கு அல்லது விசா நீடிப்புக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம் என்றும் விசா முடிவடையும்வரையும் காத்திராமல், அதற்கு முன்னரே இதனை மேற்கொள்ளும்படியும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.
