ஆஸ்திரேலியாவின் தடுப்புமுகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் அனைவரும் தற்போது பரவிவருகின்ற கொரோனா நோயினால் ஆபத்தினை எதிர்நோக்கியிருப்பதால் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி சுமார் 1183 மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் கையெழுத்திட்ட கடிதம் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அகதி முகாம்கள் மாத்திரமல்லாமல் நவுறு தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளும் கொரோனா வைரஸினால் பாரதூரமான விளைவுகளை முகங்கொடுக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்றும் இவர்கள் அனைவரும் உடனடியாக சமூகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டு உரிய மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுநோயிலிருந்து ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக அரசு அறிவித்திருக்கும் படிமுறைகள் எதுவும் அகதிகள் முகாமில் சாத்தியமில்லை என்றும் முகாம்களில் வழங்கப்படுகின்ற வசதிகள் எதுவும் நோய்க்கால தயார் நிலைக்கு போதுமானது அல்ல என்றும் மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிறிஸ்பனில் அகதிகள் தடுப்பு மையமொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
