வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்துதல், செல்ஃபி எடுத்தல், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வீடியோக்களைப் பார்வையிடுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவென, விசேட செயற்றிட்டங்களை விக்டோரிய மாநில காவல்துறை நடைமுறைப்படுத்துகின்றது.
இதன்படி மேற்குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கவென, சிவில் உடை தரித்த காவல்துறையினர் வீதிகளின் முக்கிய சந்திகளில் கடமையில் ஈடுபடுத்தப்படும் அதேநேரம் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கடமையில் ஈடுபடுகின்றனர்.
இந்த விடயத்தில் கடந்த 12 மாதங்களில் 30 ஆயிரம் அபராதக் கடிதங்கள் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மில்லியன் கணக்கான விக்டோரிய மாநிலத்தவர்கள் வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவதாகவும் துணை கமிஷனர் Doug Fryer தெரிவித்துள்ளார்.
உதாரணமாக கடந்தவாரம் Heidelberg சந்தியிலுள்ள சிக்னலில் காத்திருந்தபோது திரைப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த நபருக்கு சுமார் 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதே இடத்தில் அரைமணி நேரத்திற்குள் கைபேசி பயன்படுத்திய இன்னும் 7 பேர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாகவும் Doug Fryer தெரிவித்தார்.
இதேவேளை பலர் தமது காதிற்கருகில் கைபேசியை வைத்துப் பேசுவதைத் தவிர்த்து மடியில் வைத்துப் பேசுவதால், அவர்களைக் கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சிரமமாக இருப்பதால், Red light கமராக்களை ஒத்த கமராக்களைப் பொருத்துவதற்கு விக்டோரிய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென Doug Fryer கோரிக்கை விடுத்துள்ளார்.
