Australian Competition and Consumer Commission (ACCC)ஆல் நடத்தப்படும் Scamwatch என்ற இணையத்தளமானது, நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்கள் மோசடிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது, அவற்றைத் தவிர்ப்பது மற்றும் புகாரளிப்பது என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது.
கோவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்து, சுமார் 9,800,000 டொலர்களுக்கும் அதிகமான தொகை மோசடிகளில் இழக்கப்பட்டுள்ளதுடன், கோவிட் மோசடி தொடர்பிலான 6,415 முறைப்பாடுகளையும் இந்த இணையத்தளம் பெற்றுள்ளது.
இதேவேனை ஆஸ்திரேலியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பான பரவலான மோசடிகள் இடம்பெறுவதாக Australian Digital Health Agencyயின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr Steve Hambleton எச்சரித்துள்ளார்.

அதேபோன்று இணையவழி போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்குபவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கும் Dr Steve Hambleton, போலி தடுப்பூசிச் சான்றிதழைப் பெற விரும்புவோர், இணையக் குற்றவாளிகளுக்கு கடன் அட்டை விவரங்கள் உட்பட தங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதால், அடையாளத் திருட்டுக்கு ஆளாக நேரிடும் என்கிறார்.
தனிப்பட்ட சுகாதாரத் தகவல்கள் கறுப்புச் சந்தையில் மிகவும் பெறுமதியானவை. எனவே தகவல் திருட்டுக்கு உள்ளாகுபவர்கள் அதைச் சரிசெய்வது மிகவும் கடினமாகும்.
அதேநேரம் மோசடிக்காரர்கள், கோவிட்-19 பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் மற்றும் phishing மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பி அரச நிறுவனங்களைப் போல நாடகமாடுகின்றனர்.

மோசடிக்காரர்கள் உங்களை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். எனவே அநாமதேய மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியில்; உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும்.
இப்படியான அநாமதேய மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியில்; உள்ள இணைப்புகளின் மூலம் மென்பொருள் ஒன்று எமது கணணி அல்லது தொலைபேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுகின்றன.
அரசு, வணிகங்கள் அல்லது பிரபல நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போலியான இணையதளங்களையும் மோசடிக்காரர்கள் உருவாக்கலாம்.
அத்துடன் தாங்கள் இலக்குவைக்கும் நபரைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை மோசடிக்கார்கள் முன்கூட்டியே சேகரிப்பதால், அவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளும்போது எம்மைப் பற்றிய சில தகவல்களை வழங்க முடியும், அது அவர்கள் மீதான நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தலாம்.
இதேவேளை கோவிட்-19க்கான சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள், முகக்கவசங்கள் போன்ற தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி மோசடி செய்பவர்கள் போலி ஆன்லைன் ஸ்டோர்களையும் உருவாக்கியுள்ளனர்.

மோசடிக்காரர்களின் பொதுவான இலக்கு மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதாகும்.
இவ்வாறு திருடப்படும் தனிப்பட்ட விவரங்கள் கறுப்புச் சந்தைக்கென டார்க் வெப்பில் விற்கப்படுகிறது. உங்கள் பிறந்த தேதி, நீங்கள் வசிக்கும் இடம் உட்பட உங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றால், அனைத்து மோசடிகளுக்கும் ஆதாரமாக அதைப் பயன்படுத்தலாம்.
கொரோனா பரவலையடுத்து பலரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அதிகரித்திருந்ததால், நாங்கள் இணையத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளோம் என்பதில் எங்களிடம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதேநேரம் மோசடிக்காரர்கள் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கலாம் என்பதால் நாம் அனுப்பும் தகவல்களை அவர்களால் கைப்பற்ற முடியும்.
அதேநேரம் கோவிட் பரவலின் போது வணிக மோசடிகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் சூப்பர் அனுவேசன் நிதியைத் திருடுவதற்கோ அல்லது தேவையற்ற சேவைகளை வழங்குவதாக கூறி மோசடி செய்வதற்கோ பலர் முயற்சிப்பதால் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதேவேளை மோசடிக்கு உள்ளானவர்கள் இதனை Scamwatch இணையத்தளமூடாக முறையிடலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
