வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் பயணிகள் அனைவரும் கோவிட் சோதனையை மேற்கொண்டு, எதிர்மறை(negative) முடிவு கிடைத்ததை உறுதிசெய்தால் மாத்திரமே நாட்டுக்குள் நுழையமுடியும் என்ற நடைமுறை இன்று ஜனவரி 22 முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா திரும்பும் ஒருவர் விமானப்பயணம் மேற்கொள்வதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொண்டு எதிர்மறை முடிவு கிடைத்ததை check-in செய்யும்போது உறுதிசெய்ய வேண்டும்.
4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வேறு நோய் நிலைமைகள் காரணமாக கோவிட் சோதனை செய்யமுடியாதவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.(மருத்துவரின் கடிதம் காண்பிக்கப்பட வேண்டும்)
அத்துடன் பயணிகள் அனைவரும் விமானப்பயணம் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறையும் கட்டாயமாக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கென ஆஸ்திரேலிய அரசால் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு விமானசேவைகளிலும் இன்னும் பல சர்வதேச விமானசேவைகளிலும் இந்நடைமுறை ஏற்கனவே பின்பற்றப்படுகின்றநிலையில் அனைத்து விமானசேவைகளுக்கும் இந்நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.
கடந்த இருவாரங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் Greg Hunt அறிவித்தார்.
எனினும் நியூசிலாந்து நாட்டிலிருந்து வருபவர்களுக்கு இக்கட்டுப்பாடு பொருந்தாது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
