கிரிக்கட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி James Sutherland பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள James Sutherland, ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய(ball-tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தைச் சுரண்டி சேதப்படுத்திய விவகாரத்தை அடுத்து, முன்னாள் பயிற்சியாளர் Darren Lehmann தனது பதவியை இராஜினாமா செய்திருந்ததுடன், அணியின் முக்கிய வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில், குறித்த விவகாரத்திற்காக கிரிக்கட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகப்போவதில்லை என James Sutherland அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் சுமார் 20 வருடங்கள் கிரிக்கட் ஆஸ்திரேலியாவுடனும் 17 வருடங்கள் தலைமை நிர்வாகியாகவும் கடமையாற்றிய மனத்திருப்தியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என தானும் தனது குடும்பமும் கருதுவதாகத் தெரிவித்த James Sutherland, பணியிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் கடந்த 2 வருடங்களாகவே ஆலோசித்து வந்ததாகவும், தற்போது இதனை அறிவிப்பதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
